5 பேர் கொலையில் சிக்கிய பாட்டி மரணம்!
திருச்சி: திருச்சியில் 5 பேர் கொலையில் தொடர்புடைய வயதான பாட்டி ஒருவர் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், அவரது மகன் செல்வகுமார், மகள் சத்யா மற்றும் கிராப்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோரைக் கொலை செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைகளைச் செய்ய கண்ணனுக்கு உடந்தையாக இருந்ததாக தங்கவேலுவின் மனைவி யமுனா மற்றும் அவரது தாயார் சீதாலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீதாலட்சுமிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் காலமானார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.