ஜெ., பேனரை அகற்றியர்களை அரெஸ்ட் செய்த போலீஸ் - விடுதலை எப்போது? உறவினர்கள் காத்திருப்பு
சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றியவர்களை அடித்து நொறுக்கிய
அதிமுகவினர், போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளினர். கடந்த 6நாட்களுக்கும் மேலாகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், திருவான்மியூரில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்றது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா வசித்து வரும் போயஸ் தோட்டம் தொடங்கி, கூட்டம் நடைபெற்ற திருவான்மியூர் வரை சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு அதிமுகவினர் ஆள் உயர அளவுக்கு பேனர்கள், கொடிகள், பிரமாண்ட கட் அவுட்டுகள், அலங்கார நுழைவுவாயில் ஆகியவற்றை அமைத்திருந்தனர். இதனால் நடைபாதையில் நடந்து சென்றவர்கள்,சாலைகளில் வாகனங்களில் பயணித்தவர்கள் என்று எல்லா தரப்பினரும் 3 நாட்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால், போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை.இதனையடுத்து, தடையை மீறி வைக்கப்பட்டு இருந்த கட்-அவுட்களை , அறப்போர் இயக்கத்தை சேர்ந்த மயிலாப்பூர் ஜெயராம், வில்லிவாக்கம் சந்திரமோகன், அத்தர் அகமது ஆகியோர் திடீரென அகற்றினர்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வைக்கப்பட்டு இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிரமாண்ட பேனர்களை அறப்போர் இயக்கத்தினர் அகற்றினர். நீதிமன்ற தடையை மீறி வைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட பேனர்களையும் அகற்றிக் கொண்டே சென்றனர்.
இதைக் கண்டு அங்கு திரண்ட அதிமுகவினர் பேனர்களை அகற்றிய 3 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இதனையடுத்து பேனர்கள் அகற்றியவர்களை அதிமுகவினர் தாக்குவதாக போலீசாருக்கு தகவல் வந்ததது.
அதிமுகவினரைதான் மயிலாப்பூர் போலீசார் கைது செய்ய உள்ளனர் என பேனர் கிழிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்கள் நினைத்தனர். ஆனால், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அடிதடியில் இறங்கிய அதிமுகவினரை கைது செய்யாமல், அடி வாங்கிய 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது. ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தின் குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மூவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை தெரியவரும்.
அடித்தவர்களை விட்டு விட்டு அடிவாங்கியவர்களை பிடித்து சிறையில் அடைத்து மகத்தான சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு போலீஸ். அறப்போர் இயக்கத்தினரை அடித்தவர்கள் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரை கூட பதிவு செய்ய மறுத்து விட்டார்கள் என்பதுதான் வேதனையான விசயம். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?












Click it and Unblock the Notifications