ஜெஜெ டிவிக்கு கருவிகள் வாங்கியதில் மோசடி: சசியின் அக்காள் மகன் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு!
அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சென்னை: அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா அக்காள் மகனான டிடிவி.பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சென்னையில் வசித்து வரும் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி பாஸ்கரன் தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா டிவியில் பொறுப்பில் இருந்த இவர், பிறகு அதிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார்.
ஜெயா டிவியில் வேலை பார்த்த போதே மோசடி புகாரில் பாளையங்கோட்டை சிறையில் 8 மாதம் இருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்நிய செலவாணி மோசடி
இந்நிலையில் கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத் தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது, அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் பல கோடி ரூபாயை சட்டவிரோதமாக டாலர்களாக முதலீடு செய்தது, மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக வி.கே.சசி கலா, பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
20 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கு
இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத் தில் நடந்து வருகிறது. ஜெ.ஜெ.டிவிக்கு கருவிகள் இறக்குமதி செய்ததில் மோசடி என சசி, பாஸ்கரன் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆஜரான பாஸ்கரன்
இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் பாஸ்கரன் இன்று ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான பாஸ்கரன் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என வாதம் செய்தார்.
10ஆம் தேதி குறுக்கு விசாரணை
பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி விசாரணையை மே 10-க்கு ஒத்திவைத்தார். மேலும் மே 10-ம் தேதி அரசு தரப்பு சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படுவர் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.