சாணக்கியத்தனத்தில் சசிகலாவையே விஞ்சுகிறாரா தினகரன்? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
அதிமுகவிலிருந்து சசிகலாவை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்ட அவரது அக்காள் வனிதாமணியின் மகன் டிடிவி தினகரன் காய் நகர்த்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை: அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்துவிட்டு பெங்களூர் சென்ற சசிகலாவை ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்தே ஓரங்கட்டுவதற்கான அத்தனை நடவடிக்கைகளிலும் தினகரன் சாமர்த்தியமாக ஈடுபட்டு வருகிறார் என்று அதிமுகவினர் அதிர்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியும், ஆட்சியும் தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக சசிகலா நடத்திய நாடகங்கள் ஏராளம். அரசியல் ஆதாயம் கருதி கிடைத்த வரை லாபம் என்று கணக்குப் போட்ட மூத்த அமைச்சர்களோ, சசிகலா முன்னிறுவதிலேயே குறியாக இருந்தனர்.
கட்சிப் பொறுப்பை ஒப்படைத்ததாக இருந்தாலும் சரி, சட்டசபை குழுத் தலைவராக நியமிப்பதிலும் சரி காலில் பம்பரத்தை சுற்றிக் கொண்டு சுழன்று கொண்டே இருந்தனர். இந்த நிலையில்தான் சசிகலா கனவு நிறைவேறாமல் போய்விட்டது.
சொத்துக் குவிப்பு
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பும் வரையிலாவது முதல்வராக இருக்காலம் என்ற சசிகலாவின் அந்த கனவுக்கு வேட்டு வைத்தது உச்சநீதிமன்றம், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரும், தமது ஆதரவாளருமான எடப்பாடியை சசிகலா முதல்வராக்கினார்.
துணை பொதுச் செயலாளர்
சசிகலா சிறைக்கு செல்லும்போது தனது பதவியில் தினகரனை உட்கார வைக்கவில்லை. புதிதாக துணை பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் அமர்த்தினார்.
தேர்தல் ஆணையத்தில் மனு
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் முறையிட்டனர். அப்போது இதுகுறித்து சசிகலா பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இறுதி நாளான கடந்த 28-ஆம் தேதி நோட்டீஸ் குறித்து ஆலோசனை நடத்த சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
தினகரனுக்கு நோஸ் கட்
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது சரியே என்று தேர்தல் ஆணையத்துக்கு துணை பொதுச் செயலாளரான தினகரன் 5 கடிதங்கள் மூலம் விளக்கம் அளித்தார். எனினும் யாரென்றே தெரியாத தினகரன் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், வரும் 10-ந் தேதி சசிகலாவே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோஸ் கட் கொடுத்தது.
சசிகலா அதிருப்தி...
தன்னை கலந்தாலோசிக்காமல் தினகரன் தன்னிச்சையாக விளக்கம் அளித்ததையும், அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்ததையும் எண்ணி சசிகலா, தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். சசிகலா சிறையில் இருந்து வருவதற்குள் கட்சியையும், ஆட்சியையும் தன் கைக்குள் கொண்டு வர தினகரன் படுதீவிரமாக முயற்சிக்கிறார்; இதன் ஒருபகுதிதான் சசிகலாவுக்கு சிக்கலை உருவாக்கும் கடிதத்தை அனுப்பியது என்கின்றனர் அதிர்ச்சியுடன் அதிமுக மூத்த தலைவர்கள்.