ஜெயில்ல இருக்கும் சித்தியை பார்க்க போறேன்.. பரபரப்புக்கு மத்தியில் பெங்களூருக்கு ஓடும் தினகரன்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று பிற்பகல் டிடிவி.தினகரன் சந்திக்கிறார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த புகரில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக டெல்லி தொழிலதிபர் ஒருவரை பிடித்து 1.30 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக டிடிவி.தினகரனிடம் விசாரிக்க டெல்லி போலீசார் நாளை சென்னை வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் மறுப்பு
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றும், சுகேஷ் சந்திரா யாரென்று தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
பெங்களூரு செல்கிறார்
கட்சியை அழிக்க சிலர் முயற்சித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூரு செல்ல உள்ளதாகவும் டிடிவி.தினகரன் கூறினார்.
2 மணிக்கு சந்திப்பு
இன்று பிற்பகல் 2 மணிக்கு டிடிவி.தினகரன் சசிகலாவை சந்திக்கிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஆர்கேநகர் இடைத்தேர்தல், எடப்பாடி அரசின் செயல்பாடு, இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்தது உள்ளிட்டவை தொடர்பாக பேசுவார்கள் என தெரிகிறது.
ஏற்கனவே சசிகலா அதிருப்தி
ஏற்கனவே டிடிவி.தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது சசிகலா அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்கவுள்ளார். டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தமிழக அரசியலலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூலாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.