ஆர்.கே.நகரில் விசிலடிக்கும் தினகரனின் குக்கர்... ராஜநாயகத்தின் 2வது சர்வே முடிவு
ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்துக்கே மக்கள் ஆதரவு உள்ளதாக. பேராசிரியர் ராஜநாயகத்தின் இரண்டாவது கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சென்னை : ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்திற்கான வேட்பாளரையே மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் இரண்டாவது கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையம் கடந்த 13ம் தேதி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் டி.டி.வி தினகரனுக்கு அதிகம் ஆதரவு இருப்பதாக இருந்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஆளும்கட்சி உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மைய அமைப்பு தனது இரண்டாவது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்த இரண்டாவது கருத்துக்கணிப்பு டிசம்பர் 13 முதல் 17ம் தேதி வரை 3040 பேரிடம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் டி.டி.வி தினகரனே அதிக வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், சின்னத்திற்கான மதிப்பீட்டிலும் குக்கர் சின்னத்திற்கான வேட்பாளரையே எளிதில் அடையாளம் காண முடிவதாக தெரிவித்து உள்ளார்கள் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் கடந்த முறை(91.6) கருத்துக்கணிப்பில் கிடைத்ததை விட டி.டி.வி தினகரன் இந்த முறை (97.4) அதிக புள்ளிகள் பெற்று உள்ளார்.
தினகரனின் குக்கர் சின்னத்திற்கு அடுத்தபடியாக இரட்டை இலை 95.4 புள்ளிகளும் , உதயசூரியன் 94.6 புள்ளிகளும் பெற்று உள்ளது. இன்று வாக்களித்தால் கூட யார் ஜெயிக்க முடியும் என்கிற கேள்விக்கும் தினகரனே அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இந்த கேள்விக்கு டி.டி.வி தினகரன் 37.4 புள்ளிகளும், மருது கணேஷ் 24.3 புள்ளிகளும், மதுசூதனன் 22.1 புள்ளிகளும் பெற்று உள்ளனர். நோட்டா 3 புள்ளிகளும், யாருக்கு வாக்களிப்பது என்கிற பதிலுக்கு 7 புள்ளிகளும்
கிடைத்து உள்ளன. தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி வந்தாலும், டி.டி.வி தினகரனுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பது மீண்டும் பெரிய கட்சிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து உள்ளது.