நல்ல முடிவெடுப்பதாக ஆளுநர் சொல்லியுள்ளார்.. சிரித்த முகத்துடன் தினகரன் பேட்டி!
முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் காலதாழ்த்தாமல் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளதாக டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை : முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாததால் குதிரை பேரங்கள் நடக்காமல் இருக்க ஆளுநர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் விரைவில் நல்ல முடிவை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று ராஜ்பவனில் சந்தித்தார். இதனையடுத்து தனது வீட்டில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
கடந்த 22ந்தேதி முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக எம்எல்ஏக்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கூறினோம். கடந்த 5ம் தேதி முதல்வர் பழனிசாமி நடத்திய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 111 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் ஆளுநர் குதிரை பேரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது, காலம் தாழ்த்தாமல் நல்ல தீர்வு காண வேண்டும் என்று ஆளுநரிடம் கூறியுள்ளோம்.
எங்களைப் பொறுத்தவரையில் முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியும், துணை முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட வேண்டும். ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் நல்ல முடிவை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார். என்னுடைய கடமையில் இருந்து நான் தவறமாட்டேன் என்று ஆளுநர் கூறினார்.

ஜக்கையனுக்கு மிரட்டல்
ஜக்கையன் என்னிடம் நேற்று இரவு கூட பேசினார். எம்எல்ஏ பதவி பறிபோய்விடும் என்று மிரட்டுவதாகச் சொன்னார். சென்னை வந்ததும் முதல்வர் பழனிசாமி பக்கம் போய்விட்டார்.

ஜக்கையன் வரை பாய்ந்துவிட்டது பணம்
பணம் பாதாளம் வரை பாயும், அது இப்போது ஜக்கையன் மீது பாய்ந்துவிட்டது, இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. என்னிடம் தலைமை நிலைய செயலர் அல்லது அவைத் தலைவர் பதவி கேட்டு வந்தார் தற்போது அந்த அணிக்கு மாறியுள்ளார்.

ஸ்லீப்பர் செல்
ஒரு எம்எல்ஏ போனால் இரண்டு பேர் எங்கள் அணிக்கு வருவார்கள், முதல்வர் அணியிலும் எங்கள் ஸ்லீப்பர் செல் உள்ளது. விரைவில் அவர்கள் வெளிவருவார்கள். எடப்பாடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது மக்கள் கூறினர். துரோகிகள் இரண்டு பேரை நீக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. எடப்பாடி, ஓபிஸ் பதவி நீக்கும் வரை ஓயமாட்டோம். மக்கள் அவர்கள் இருவரையும் ஏற்கவில்லை, துரோக ஆட்சி முடிவுக்கு வரும்.

தொகுதிக்கு போக முடியுமா?
எடப்பாடி பழனிசாமியாலோ, ஓ.பன்னீர்செல்வத்தாலோ அவர்களின் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியாது. மக்கள் மன்றத்தில் அடுத்த தேர்தலில் அவர்களால் ஓட்டு கேட்க கூட முடியாது, என்று தினகரன் சாடினார்.












Click it and Unblock the Notifications