நியூட்ரினோ, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக விரைவில் போராட்டம்... திருச்சியில் டிடிவி அறிவிப்பு!
நியூட்ரினோ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video
திருச்சி : தேனி நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் நலனுக்காக விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி. தினகரன் பங்கேற்றார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது டிடிவி. தினகரன் பேசியதாவது : விவசாயிகள் நடத்தும் முற்றுகைப் போராட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் சசிகலா சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த போராட்டம் நடக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவே இந்த போராட்டம் நடக்கிறது. இது ஏதோ அரசியல் லாபத்திற்காக தேர்தலை மனதில் வைத்து நான் செய்யவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் நன்றாக தெரியும்.
கடந்த மார்ச் 25ம் தேதி தஞ்சாவூரில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்காக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினேன். தொடர்ந்து விவசாயிகளுக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்பதால் தான் அவர்களின் போராட்டங்களில் நான் பங்கேற்று வருகிறேன்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் நாம் எதிர்ப்போம் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சை டெல்டா பகுதியை நிச்சயம் விவசாயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றுவோம். விவசாயிகளுக்கு விரோதமான எந்த ஒரு திட்டத்தையும் வருங்காலத்தில் அனுமதிக்க மாட்டோம்.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டமாக இருந்தாலும் ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் திட்டமாக இருந்தாலும் அனைத்தையும் எதிர்த்து ஜெயலலிதாவின் ஆட்சியை செயல்படுத்துவோம். விளை பூமியில் ரத்தினமோ, மாணிக்கமோ எது கிடைத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை. தமிழகத்தை சோமாலியாவாக மாற்றும் திட்டங்களை நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம்.
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து விரைவில் போராட்டம் அறிவிக்க உள்ளேன். இதே போன்று ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்களுக்காக ஏப்ரல் 8ம் தேதி கண்டன பொதுக்கூட்டத்தை அறிவித்திருந்தேன். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயம் நீதிமன்றம் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கும் மக்களுக்காக அந்த கூட்டத்தை நடத்துவோம் என்றார்.