துருக்கியில் விளையாடப் போன இந்திய மாணவர்களுக்கு அவமதிப்பு: சீருடை வழங்காதது ஏன்?- விஜயகாந்த்
சென்னை: துருக்கியில் சர்வதேச விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற பல மாணவர்களுக்கு இந்திய சீருடைகள் முறையாக வழங்கப்படாததால் பல மாணவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்பது வேதனைக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
துருக்கியில் பள்ளிகள் அளவிலான சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து சுமார் 148 போ சென்றனர். இதில் தமிழகத்தில் இருந்து சுமார் 11 மாணவ, மாணவிகளும் அடங்குவர். துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்ட போது அனைவரும் பதற்றமடைந்தனர். புரட்சி ஒடுக்கப்பட்டதை அடுத்து நேற்று அனைவரும் பத்திரமாக நாடு திரும்பினர். செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், தங்களது கோரிக்கைகளை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை, என கவலையுடன் தெரிவித்தனர்.

துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்ட போது, நாங்கள் சில கோரிக்கைகளை வைத்தோம், ஆனால் எதையும் அவர்கள் ஏற்கவில்லை. தவிர, விளையாடு அமைச்சகமும் எங்களுக்கு சீருடை வழங்காததால், போட்டிகளிலும் எங்களால் பங்கேற்கமுடியவில்லை என்று சோகத்துடன் கூறினர்.
விளையாட்டுத்துறையின் கவனக்குறை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
துருக்கியில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டிகள், துருக்கியில் டிராப்சோன் நகரில் கடந்த 11 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடந்தது. துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு குண்டுவெடிப்பு மற்றும் கலவரங்கள் நடந்த போதும், விளையாட்டு போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், போட்டிகளில் பங்கேற்க சென்ற அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரபட்டனர் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இந்தியாவின் சார்பாக 149 மாணவர்களும் முக்கியமாக தமிழகத்தின் சார்பாக 10 பேரும் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் பல பேருக்கு விளையாட்டில் பங்கேற்க, இந்திய சீருடைகள் வழங்கப்படிருக்க வேண்டும். ஆனால் அந்த சீருடைகள் முறையாக வழங்கப்படாததால் பல மாணவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்பது உன்னமையிலையே வேதனைக்குரியது. இதுபோன்ற பிரச்சனை கடந்த முறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவர்கள் பலமுறை நினைவூட்டியும் உரிய நேரத்தில் சீருடைகள் வழங்காததால், இந்த முறையும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்து, மிகப்பெரிய நாடாக கருதப்படும் இந்தியா விளையாட்டு துறையில் உலக அளவில் மிகவும் பிந்தங்கியுள்ளதற்கு, இதுபோன்ற அரசாங்கத்தின் கவனக்குறைவுதான் காரணம். சீனா விளையாட்டு துறையில் உலகிலையே முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
வருங்கால இளைஞர்களை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவின் பெயரை உலக அளவில் கொண்டுவர வேண்டியது நம் அரசாங்கத்தின் கடமை. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மாணவ-மாணவிகளை முறையாக கண்டறிந்து உரிய முறையில் பயிற்சி அளித்து அவர்களை ஊக்கப்படுத்தினால், வருங்காலத்தில் இந்தியாவிலும் இலட்சக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம். கிரிக்கெட் துறைக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் நமது அரசு, அனைத்து விளையாட்டுக்களிலும் அதேபோன்ற அக்கறைகளை செலுத்தி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க நாடுவிட்டு நாடு செல்லும் போது அவர்களுக்குரிய உணவு, உடை, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவது நம்நாட்டின் கடமை. சீருடை வழங்காததால் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது சர்வதேச அளவில் இந்தியாவிற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற குறைகள் ஏற்படாமல் இருக்க விளையாட்டுத்துறை கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு தொகையினை வழங்கி, அவர்கள் சோர்வடையாமல் மேலும் விளையாட்டு துறையில் ஆர்வமுடன் வருங்காலங்களில் பங்கேற்க வழிவகை செய்யவேண்டும். விளையாட்டு துறையின் இந்த கவனக்குறைவு கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications