வெள்ளத்தில் தவிக்கும் தூத்துக்குடி: கலெக்டர் காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் சரியாக கிடைக்காததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக வில்லசேரி குளம் உடைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கீழ் தளத்தில் தண்ணீர் புகுந்துள்ளது.

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளநீரில் சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் கீழே வர முடியாமல் மேல் மாடியில் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடியாததால் பலர் உணவுக்காக ஏங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை மாலையில் நான்கு வழிச்சாலையில் கலெக்டர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் பலன் இல்லாததால் அவர்கள் சோர்ந்து போய் காணப்படுகின்றனர். இந்த வெள்ளத்திற்கு அரசு அலுவலகங்களும் தப்பவில்லை.
அரசு அலுவலக கோப்புகள், கம்யூட்டர்கள், மேஜை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் கடல் போல் காட்சி அளித்து வருகிறது. நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications