ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 24 ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 24 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அனுமதியுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பலகட்டங்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 17ம் தேதி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை கிருஷ்ணமூர்த்தி நாடினார். மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த கிருஷ்ணமூர்த்தி கோரியிருந்ததற்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications