மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மருத்துவமனையில் இருநது தப்பி ஓடியதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்போரை அருகே கீழக்கல்லாம பாறையை சேர்ந்தவர் காசி மனைவி பாக்கியலெட்சுமி. அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ராஜகுமார்.
இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து வீடுகள் இருக்கின்றன. இந்த இடம் தொடர்பாக பாக்கியலெட்சுமிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜ்குமார் பாக்கியலெட்சுமியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குரும்பூர் போலீசில் பாக்கியலெட்சுமி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுணடம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தலைமை காவலர் சுப்பையா, ராமசாமி ஆகியோர் ஆஜர்படுத்தினர்.
அவரை ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர்.
மருத்துவமனை வெளிப்புற நோயாளிகள் பிரிவில் அவரை அமர வைத்து விட்டு டாக்டரை பார்க்க போலீசார் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது அங்கே அவர் இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் மருத்துவமனை வாளகம் முழுவதும் தேடி பார்த்தனர்.
எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து வாகனங்களிலும் போலீசார் அதிகாலை வரை சோதனை நடத்தினர். ஆனால் அவர் சிக்கவில்லை. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.