தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டம்.. 10,000 பொதுமக்கள் மீது பாய்ந்தது வழக்கு
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று, நீர் மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அத்துடன் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறினர். மேலும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், இதய நோய், புற்றுநோய் ஆகியன ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலையை கண்டித்து மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இவர்களது போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது.

144 தடை உத்தரவு
இந்நிலையில் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுக்க மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுமக்கள் முன்னேற்றம்
எனினும் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்டனர். அப்போது அவர்களை மடத்துக்குளம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த தடையை மீறி பொதுமக்கள் முன்னேறி சென்றனர்.

13 பேர் பலி
அப்போது போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் பார்த்தனர். எனினும் அவர்கள் அதற்கெல்லாம் அச்சப்படவில்லை. பதிலுக்கு போலீஸார் மீது கல்வீச்சி தாக்குதல் நடத்திவிட்டு நேராக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று சூறையாடினர். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

12 பிரிவுகள்
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போல், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வளவு பேர் கலெக்டர் அலுவலகம் அருகே வரும்வரை மாநில நிர்வாகம் ஏன் தடுக்க முடியவில்லை, முன்கூட்டியே அறிய முடியவில்லை என்ற கேள்விக் கணைகள் எழுந்துள்ளதோடு, இவ்வளவு அதிகப்படியான மக்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டு இதை சமூக விரோத சக்திகளின் ஊடுருவல் என முதல்வர் சொன்னது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications