இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்று தாயும் தற்கொலை – தூத்துக்குடி பரிதாபம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பெண் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிச்சையா. ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், திரிஷா , அஜிதா என்ற 2 குழந்தைகளும் இருந்தனர்.
சொந்த ஊருக்கு பயணம்:
2 குழந்தைகளும் வெளியூரில் உள்ள பள்ளியில் விடுதியில் படித்து வருகின்றனர். நேற்று பாண்டியம்மாள் தனது 2 குழந்தைகளையும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.
கழுத்தை நெரித்துக் கொலை:
இந்நிலையில் இன்று காலை பாண்டியம்மாள் தனது குழந்தைகளை அப்பகுதியில் உள்ள மடத்துப்பட்டி ஊரணி பகுதிக்கு அழைத்து சென்றார். திடீரென பாண்டியம்மாள் பெற்ற குழந்தைகள் என பாராமல் 2 பேரையும் சேலையால் கழுத்தை நெரித்து கொன்றார்.
தூக்குப் போட்டு தற்கொலை:
பின்னர் சிறிது நேரத்தில் பாண்டியம்மாள் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசாருக்குத் தகவல்:
2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டும், அருகே தாய் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மருத்துவப் பரிசோதனை:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் போலீசார்:
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications