பிப். 23- சேலம் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பு: தி. வேல்முருகன்
தருமபுரியில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:
தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால். கச்சத்தீவை நாம் மீண்டும் பெற வேண்டும். கச்சத்தீவை பெற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமென மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.
இந்த அபிடவிட்டை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். வருகிற லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரசு கட்சியை தீவிரமாக எதிர்ப்போம். மேலும் பா.ம.க. இடம் பெறும் கூட்டணிகளில் நாங்கள் இடம் பெறமாட்டோம்.
வருகிற லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்கு இல்லை. வருகிற சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி நாங்கள் கட்சி வளர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால் பா.ம.க.வினர் தேர்தல் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் தேர்தலை சந்திக்கவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளனர்.
இருப்பினும் அடுத்த மாதம் 23-ந் தேதி சேலத்தில் நடைபெறும் கட்சி மாநாட்டில் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி அறிவிப்போம்.
இவ்வாறு தி.வேல்முருகன் கூறினார்.