மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காத மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் வேல்முருகன் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தொடர் கதையாகி வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறது இலங்கை கடற்படை.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் அலட்சியத்தைக் கண்டித்தும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.