சென்னையில் ஆந்திரா பவன், நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை-பேருந்துகள் சிறைபிடிப்பு!
நெய்வேலி: தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திரா மாநில அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களின் போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திரா அரசு சுட்டுப் படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆந்திராவை கண்டித்து போராட்டங்களை நடத்தினர். நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமை வகித்தார்.

இதேபோல் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களில் ஆந்திரா மாநில பேருந்துகளை சிறைபிடித்தும் சாலை மறியலில் ஈடுபட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னை ஆந்திரா பவன் முற்றுகை

சென்னையில் ஆந்திரா பவனை முற்றுகையிட்டும் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.













Click it and Unblock the Notifications