சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் மோதல் - விசாரணைக்கு உத்தரவு
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு கப்பலும் மற்றொரு சரக்கு கப்பலும் மோதிக்கொண்டன. இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கப்பல்களும் மீட்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் மூலம் ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
நாட்டில் உள்ள 12 துறைமுகங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஒரு மிகப்பெரிய துறைமுகம் ஆகும். எண்ணூர் துறைமுகத்தில் தற்போது ஆறு சரக்கு கையாளும் தளங்கள் உள்ளன. அவற்றின் சரக்குகள் கையாளும் திறன் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் டன் ஆகும்.
எண்ணூர் துறைமுகம் அருகே அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. துறைமுகத்திற்குள் நுழையும் கப்பல்கள் உரசிக் கொள்வதும், மீன்பிடி படகுகள் மீது சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து ஏற்படுவதும் வாடிக்கை . இந்த நிலையில் இன்று இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், ஹெலிகாப்டர் மூலம் கப்பல் ஊழியர்களை மீட்டனர். கப்பல்கள் மீட்கப்பட்டாலும் ஹெலிகாப்டர் மூலம் ரோந்து பணி நடைபெற்றது.
விசாரணைக்கு உத்தரவு
கப்பல்கள் இரண்டும் துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், துறைமுகத்தில் கப்பல்கள் மோதியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி அறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான 2 கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. கடலின் சூழலை பாதிக்கும் வகையில் எண்ணைய் கசிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.