2 நாள் லீவு... மூடியே கிடக்கும் ஏடிஎம்கள்... டென்சனில் மக்கள்!
இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதாலும், ஏடிஎம்கள் பணமின்றி மூடியே கிடப்பதாலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த மாதம் 8ம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் வங்கிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே வங்கிகளில் பணம் எடுப்பதற்குரிய புதிய வரம்புகள் விதிக்கப்பட்டது. பின்னர் அது சற்று தளர்த்தப்பட்டது.

பிரச்சினை தீரவில்லை...
ஆனால், ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை. வங்கிகளில் பணம் எடுப்போருக்கும் கையிருப்பை பொறுத்தே பணம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், வீட்டு வாடகை, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அத்திவாசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

2 நாட்கள் விடுமுறை...
இந்நிலையில், நேற்று மாதத்தின் 2வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதனால் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மூடிக் கிடக்கும் ஏடிஎம்கள்...
இதனால் தங்களது பணத்தை எடுக்க மக்களுக்கு ஏடிஎம் மையங்கள் மட்டுமே ஒரே வழி. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் ஒரு சில ஏடிஎம்களைத் தவிர மற்றவைகளில் பணம் இல்லாததால், அவை மூடியே கிடக்கின்றன. எனவே, பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களில் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் மட்டும்...
இது ஒருபுறம் இருக்க, ஏடிஎம்களில் ரூ. 2000 புதிய நோட்டுகள் மட்டுமே வருவதால், அதற்குக் கீழே வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் தேவையான பணத்தைப் பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

மீண்டும் விடுமுறை...
பெரும்பாலான ஏடிஎம்களில் நேற்றே பணம் காலியாகி விட்டதால், இன்று பணத்தை எடுக்க வழியின்றி மக்கள் அல்லல் பட்டு வருகின்றனர். அதோடு நாளை ஒருநாள் மட்டும் வங்கிகள் செயல்படும். பின்னர் மீண்டும் மிலாடி நபியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை.

திட்டம்...
இதனால் நாளை எப்படியும் வங்கி அல்லது ஏடிஎம்-ல் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என இப்போதே மக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications