சென்னையை மிரட்டும் டெங்கு… 2 பேர் பலி… 9 பேர் பாதிப்பு: தடுக்குமா மாநகராட்சி?
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த வாரங்களில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், மயிலாப்பூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தை டெங்கு காய்ச்சல் ஆட்டி படைத்தது. டெங்குவின் தீவிரத்தால் பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் சார்பில் நில வேம்பு குடிநீர், பப்பாளி இலை சாறு போன்ற இயற்கை மருந்துகள் வழங்கப்பட்டதால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது இன்னும் மழைக்காலம் முழுமையாக கூட தொடங்கியிருக்காத சூழலில் சென்னையை இப்போதே டெங்கு ஆட்டி படைக்க தொடங்கி விட்டது.

சிறுவன் மரணம்
சென்னையை அடுத்த ஆவடியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் ரூபேஷ் (வயது 15) பலியானார். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரூபேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் இழந்தார். ரூபேசின் தங்கை மதுமிதாவிற்கும் (13) டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் வசிப்பவர்களுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண் பலி
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி லில்லி. கடந்த வாரம் சில நாள்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த லில்லிக்கு, டெங்குக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி 18ம் தேதி உயிரிழந்தார்.

மிரட்டும் டெங்கு
சுகாதாரப் பணிகளில் சுணக்கம் காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மயிலாப்பூர் 124, 125வது வார்டில் உள்ள சாந்தோம், வடக்கு வீரச்சி தெரு, புதுத்தெரு, சோலையப்பன் தெரு, ஆப்ரஹாம் தெரு உள்ளிட்ட தெருக்களில் வசிக்கும் 5 குழந்தைகளுக்கு நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்களை திருவல்லிக்கேணி கல்யாணி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கிருந்து சிகிச்சைக்கு பின், 3 குழந்தைகள் மட்டும் வார்டுக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் தீவிர சுகாதார கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

8 பேருக்கு பாதிப்பு
இதனிடையே, இதே பகுதிகளைச் சேர்ந்த மேலும் 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அவர்களையும் உடனடியாக கல்யாணி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்படுகிறது. ஒரே பகுதயை சேர்ந்த 8 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணலியில் பாதிப்பு
இதேபோல், மணலி புதுநகரை சேர்ந்த ஜோதி (32), இவரது மகன் எமபால கணேஷ் (10) ஆகியோருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு, ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் சவுமியா (23) என்பவருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அங்கு, அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது.

வடசென்னையில் பீதி
மணலியைச் சேர்ந்த அபிநாஷ் (15) என்ற சிறுவனுக்கும், எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பை சேர்ந்த ரமணி (54) ஆகியோர் மர்ம காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வடசென்னை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மணலி புதுநகரில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை சரிவர அகற்றப்படுவதில்லை. சுகாதார அதிகாரிகள், கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் கூட தெளிப்பதில்லை. இதனால், பலருக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. பலர் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். சுகாதார துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம்,' என்றனர்.

4 மாவட்டங்களில் நடவடிக்கை
சென்னையில் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து 4 மாவட்டங்களில் டெங்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தீவிர நடவடிக்கை
மழை பெய்து வருவதாலும் டெங்கு பாதித்த டெல்லிக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இந்த மாவட்டங்களில் இருப்பதாலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம். சென்னையில் மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தமிழக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

பயணிகளிடம் சோதனை
டெல்லியில் இருந்து வரும் பயணிகள் மூலமாக சென்னைக்கும் டெங்கு ஏற்றுமதியாகும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெங்கு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications