பேஸ்புக் நட்பால் பலரிடம் சீரழிந்த திருப்பூர் பள்ளி மாணவி... பதற வைக்கும் தகவல்கள்
பேஸ்புக் நட்பால் திருப்பூர் சிறுமி,மாயமாகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:பள்ளி செல்லும் 13 வயது சிறுமி பேஸ்புக் நட்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி கடந்த 27ம் தேதி திடீரென மாயமானார். புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி, சிறுமி தானாகவே வீடு திரும்பினார்.கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் பேஸ்புக்கில் திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான 21 வயது வாலிபருடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பெயரே போலி
சிவா கடந்த 27ம் தேதி சிறுமியை திருப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திச் சென்றுள்ளார். அப்போதுதான், அவனது பெயர் சிவா அல்ல, இப்ராஹீம் என்று சிறுமிக்குத் தெரிய வந்துள்ளது.
உதவி கேட்ட இடத்திலும் கொடுமை
இதையடுத்து அவனிடம் இருந்து நைசாக தப்பி லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன் என்பவரிடம் உண்மையைக் கூறி உதவி கேட்டுள்ளார்.ஆனால் அதற்குள் சிவா தப்பிவிட்டார். பின்னர், ‘உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்' எனக்கூறி சிறுமியிடம்,பிரபாகரனும் தவறாக நடந்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி திருப்பூர் வந்துள்ளார்.
இருவரையும் பிடித்த போலீஸ்
இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இப்ராஹீம், பிரபாகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.