கூடவே பள்ளி சென்ற மாணவன்தான் குற்றவாளி? - கீர்த்திகா பாலியல் கொலை வழக்கில் 2 மாணவர்கள் கைது
வேலூர்: வேலூர் மாணவி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தில் பள்ளி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கே.வி குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகள் கீர்த்திகா . மாச்சனூர் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவி, திங்கட்கிழமை காலை பள்ளிக்குச் சென்றார்.
ஆனால் மாலை அவர் வீடு திரும்பவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடி வந்தனர்.இந்த நிலையில், இன்று காலை முருகம்பட்டு மாந்தோப்பில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மாணவி இறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த கே.வி. குப்பம் காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவருடைய பக்கத்து வீட்டு பையனும், தினமும் அவருடன் பள்ளி செல்லும் ஒரு மாணவன் தலைமறைவாகியது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து அந்த மாணவனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஓசூர் அருகே தலைமறைவாக இருந்த அந்த மாணவனை தனிப்படை போலீசார் பிடித்து குடியாத்தம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அச்சிறுவன் 16 வயது நிரம்பாதவர் என்பதால் விசாரணை ரகசியமாக நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கில் ஏற்கனவே ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.