உதயகுமாரின் மனைவி திடீர் வேட்பு மனு தாக்கல்!
நாகர்கோவில்: தனது கணவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று அளித்த வாக்குறுதியை மீறி விட்டார் என்று கூறியிருந்த உதயகுமாரின் மனைவி மீரா திடீரென கன்னியாகுமரி தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒரு வேளை உதயகுமாரின் மனு நிராகரிக்கப்பட்டால் மீரா உதயகுமார் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார்.
அவர் பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
மீரா உதயகுமார் மனு தாக்கல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை ஏதாவது காரணம் காட்டி உதயகுமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்குப் பதில் மீரா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.