3 ஆண்டுகளில் 81கவுரவக்கொலைகள்: தடுப்பு சட்டம் கொண்டு வர மநகூ தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் கவுரவ கொலையை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 3 வருடத்தில் 81 பேர் கவுரவ கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பட்டப்பகலில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடந்த மரணமும் பதறவைக்கிறது. இந்தக் கொலை பாதகம் அரங்கேறும் காட்சியின் வீடியோ பதிவு வாட்ஸ் அப்பில் பரவி மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மக்கள் நலக்கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பாடல் அடங்கிய சி.டி. வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கவுரவக்கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சமூக நீதி
சமூகநீதி மலர்ந்த தமிழ் நாட்டில் கவுரவ கொலைகள் மீண்டும் நடப்பது வேதனை அளிக்கிறது. உடுமலையில் தலித் மாணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இது மிகுந்த கண்டனத்துக்குரியது. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நீதிக்கான விழிப்புணர்வு, நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றார்.
அதிகரிக்கும் கவுரவக்கொலைகள்
விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் கூறுகையில், சாதியின் பெயரால் கவுரவ கொலைகள் நடந்து வருகிறது. இது காட்டு மிராண்டித்தனத்தை காட்டுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 600 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 70 சதவீதம் கவுரவ கொலையாகும்.

பட்டப்பகலில் படுகொலை
உடுமலையில் தலித் மாணவர் சங்கர், கவுசல்யாவும் காதல் திருமணம் செய்து 6 மாதமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் சங்கர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அந்த பெண் உயிருக்கு போராடுகிறார்.
தடுப்புச் சட்டம்
இது போன்ற சம்பவம் நடப்பதற்கு அரசியல் ஆதாயம் தேடும் சில கட்சிகள்தான் காரணம். அது போன்ற கட்சிகளை அடையாளம் காண வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இருக்கிறது. இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
81 பேர் படுகொலை
ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது கடந்த 3 வருடத்தில் 81 பேர் கவுரவ கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். கவுரவ கொலையை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
கோகுல்ராஜ் படுகொலை
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தில் கவுரவ கொலைகள் நடைபெற வில்லை. அதனால் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். ஆனால் அதற்கு பிறகுதான் கோகுல்ராஜ் உள்பட பலர் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.
4 கட்ட பிரச்சாரங்கள்
தொடர்ந்து பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி உதயமாகி 8 மாதங்கள் ஆகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 3 கூட்ட பிரசாரத்தை முடித்துவிட்டோம். 24 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உள்ளோம். நேற்று சென்னையில் நடந்த 4வது கட்ட பிரசார கூட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
விரிசல் கிடையாது
எங்கள் கூட்டணிக்கு மக்களிடம் எழுச்சியும், ஆதரவும் பெருகி உள்ளது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடம் இம்மியளவு கூட விரிசல் கிடையாது. 4 கட்சிகளும் இணைந்து வாக்குப்பணிக்குழு, கண்காணிப்பு குழுக்களை அமைக்க இருக்கிறோம்.
நாங்கள் நம்பர் 1
தென்மாவட்டங்களில் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறோம். மற்ற கட்சிகளை விட தேர்தல் பணிகளை நாங்கள் முன்கூட்டியே தொடங்கி விட்டோம். எங்கள் கூட்டணிக்கு நாளுக்கு நாள் வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று கூறினார்.
விஜயகாந்த் வருவார்
மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார். அவர் எப்போது வருவார் என்பதை உங்களுக்கு விரைவில் தெரிவிப்போம் என்றும் வைகோ நம்பிக்கையுடன் கூறினார்.












Click it and Unblock the Notifications