தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது: 59 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்
கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், வாளையார் பாம்பம்பள்ளம் அருகே, திருத்தலா போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து, பாலக்காடு நோக்கி வந்துக் கொண்டிருந்த, தமிழக அரசு பேருந்தில், பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரமேஷ், பிருத்விராஜ் ஆகியோர் வைத்திருந்த பையில், 59 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை, வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த போலீசார், இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.