காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்.. நடிகர் சங்கத்திற்கு இதுவரை என்ன செய்தீர்கள் விஷால்?
நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் தன்னுடைய பல வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
சென்னை: ஆர்.கே நகரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் இதற்கு முன்பு சினிமா உலகில் கொடுத்த பல முக்கிய வாக்குறுதிகளின் நிலை குறித்து கேள்வி எழும்பி இருக்கிறது.
நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் தன்னுடைய பல வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மிகவும் குறைந்த அளவிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்.
மேலும் அவர் மீது நடிகர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பலர் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் வாக்குறுதி
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போது விஷால் கொடுத்த முக்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நடிகர் சங்க கட்டிடம் காட்டுவேன் என்று அனைத்து பேட்டிகளிலும் அவர் தேர்தலுக்கு முன்பு பேசினார். ஆனால் தேர்தல் முடிந்த பின் அதை பற்றி முழுமையாக மறந்துவிட்டார். தற்போது வெறும் அடிக்கல் நாட்டு விழாவோடு நடிகர் சங்க கட்டிடம் குறித்து வேலைகள் நின்று இருக்கிறது.
படம் என்ன ஆனது
நடிகர் தேர்தலில் அவர் கொடுத்த இன்னொரு வாக்குறுதி, நடிகர்கள் சேர்ந்து ஒன்றாக படம் நடிப்பது. அதன்படி இளம் நடிகர்கள் 5 பேர் சேர்ந்து சம்பளம் வாங்காமல் படம் நடித்து அந்த பணத்தை நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட பயன்படுத்தவோம் என்று கூறினார். ஆனால் அதன்பின் அந்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் அவரும், அவரது நண்பர்களும் வெளியிடவில்லை.
பெயர் மாறியதா
தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றப்போவதாக கூறினார். ஆனால் தேர்தல் முடிந்து அவர் பொதுச்செயலாளர் ஆகி பல மாதங்கள் ஆகியும் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. சாதாரண பெயர் மாற்றம் குறித்த அறிவிப்புக்கே அவர் இவ்வளவு காலம் எடுத்து வருகிறார்.
அதிரடி நடவடிக்கை
அதேபோல் அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனவுடன் முதலில் கூறிய வாக்குறுதி மிக முக்கியமானது. அதன்படி சினிமா தயாரிப்பாளர்கள் ரவுடிகள் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டப்படுவதை தடுப்போம் என்று கூறினார். ஆனால் அவர் வந்த பின்பு அப்படி ஏதும் கட்டப்பஞ்சாயத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
திருட்டு விசிடி பிரச்சனை
விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆவதற்கு முன்பே திருட்டு விசிடிக்கு எதிராக போராடி வந்தார். ஆனால் அவர் வந்த பின்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள பைரசி அமைப்புகள் இன்னும் தீவிரமாக செயலில் இறங்கியது. வெளிப்படையாக படத்தை தேதி குறிப்பிட்டு இணையத்தில் வெளியிட்டனர். இன்னும் அதற்கு எதிராக விஷால் சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
கட்டணம்
தியேட்டர்களில் விதிக்கப்படும் கட்டணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் தியேட்டர் நிறுவனர்கள் அவருக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்து அவரை அமைதி ஆக்கிவிட்டனர். மேலும் முன்பை விட இப்போதுதான் தியேட்டர் கட்டணமும், பார்க்கிங் கட்டணமும், உணவுகளின் விலையும் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுகிறாரோ என்று சினிமா துறையிலேயே சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.