ரூபாய் நோட்டு ஒழிப்பை ஏன் இதுல போய் சேர்க்கறீங்க.. அருண் ஜேட்லி கோபம்!
பணமதிப்பிழப்பு விவகாரத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படும் ஜிடிபி குறைந்ததாக சொல்வதை ஏற்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சென்னை : செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பால் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபி குறைந்ததாக சொல்வது அபத்தமானது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. தீவிரவாதிகள் மத்தியில் பண நடமாட்டம், மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2016-17ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் என்று இருந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் குறைவானது. முந்தைய ஆண்டுகளில் 7.5 % மற்றும் 8 சதவீதம் வரை இருந்த ஜிடிபி மிகவும் குறைந்ததற்கு செல்லா நோட்டு அறிவிப்பே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, கடந்த நிதியிண்டின் கடைசி காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி குறைந்ததற்கு செல்லா நோட்டு அறிவிப்பிற்கும் தொடர்பு இல்லை என்றார்.
உலகப்பொருளாராத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் ஜிடிபி வளர்ச்சி குறைவிற்குக் காரணம் என்று குறிப்பிட்ட ஜேட்லி, உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 7 முதல் 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது நல்ல வளர்ச்சியே என்றும் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சியை உயர்த்துவதற்கு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரும் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
வெளிப்படையான நிர்வாகம், பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாண்டுகளுக்கு முன்னர், பொருளாதார சீர்திருத்தங்களிலும், முடிவெடுப்பதிலும் இருந் தேக்கநிலையை மாற்றி, இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்திருப்பதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications