தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு: ஜல்லிக்கட்டை தொடர்ந்து பொங்கலிலும் கைவைப்பது சரியா?
பொங்கல் விடுமுறை அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு, காவிரி விவகாரம், பாலாறு பிரச்சனை, மீனவர் விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவும் கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்து கொண்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தது.

அதேபோல் முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகள் உள்பட அனைத்து நதிநீர் பிரச்சனைகளிலும் தமிழகத்துக்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மீனவர்கள் கைது நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களிலும் தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் போற்றி பாதுகாத்து வந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இதனால் 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
கடநத் ஆண்டும் கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது. மத்திய அரசு நினைத்திருந்தால் அப்போதே ஜல்லிகட்டு நடத்த அனுமதி அளித்திருக்க முடியும் ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு அடியாக மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
மேலும் உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர் பாரம்பரிய விளையாட்டு நசுக்கப்பட்ட நிலையில் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருப்பது தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications