சென்னையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.. திட்டம் இதுதான்..!
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். அவரது பயணத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் பாஜக கூட்டணியை இறுதி செய்வதற்காகவே.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் எவை என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பாமகவோ, தங்கள் தலைமையில் கூட்டணி என்கிறது; தேமுதிகவோ பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது. 'கிங்காக இருப்போம்- கிங் மேக்கராக இருக்கமாட்டோம்'என தத்துவம் பேசிவருகிறது தேமுதிக. இதனால் பாஜக பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தமிழக பாஜக தலைவர்கள் பல முறை சந்தித்து பேசியும் இன்னமும் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அன்புமணியும், விஜய்காந்தும் தாங்களே முதல்வர் வேட்பாளர்கள் என்ற முடிவில் இருப்பதால் இருவரையும் ஒரு கூட்டணிக்கும் பாஜகவால் கொண்டு வர முடிவில்லை.
அன்புமணியை விட தேமுதிகவே முக்கியம் என்பதால் அதன் ததலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார் என்றும் கூட பாஜக கூறிவிட்டது. ஆனாலும் தேமுதிகவிடம் இருந்து சிக்னல் வரவில்லை. 234 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை வாங்கிவிட்டு நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
இந்த நிலையில் கூட்டணி பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கூட்டணி கட்சிகள் குறித்து தெரிவிப்பதாகவும் கூறினார்.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துமா? என்று கேட்டதற்கு, அது வெறும் யூகம் என்று தெரிவித்தார் பிரகாஷ் ஜவடேகர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும், பா.ம.க. தலைவர்களை சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற்றிருந்தார். இதனால் பாஜக உடன் ராமதாஸ் விரும்பவில்லை. எனவே கூட்டணி பேச்சுவார்த்தையில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை. அன்புமணி மூலமாகவே கூட்டணிக்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்தனர்.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி, பாஜக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை.
இன்று பாமக மாநாடு நடைபெறுவதாலும், நாளை தர்மபுரி தொகுதிக்கு செல்வதாலும் ஜவடேகருடன் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அன்புமணி கூறி விட்டார். எனவே எனவே டாக்டர் ராமதாசை சந்திக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
ஏற்கனவே அன்புமணி தலைமையை ஏற்று அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். எனவே கூட்டணிக்கு வர தேமுதிக சம்மதிக்காத பட்சத்தில் பாமக தலைமையில் தேர்தலை சந்திக்க பாஜக தயாராகிவிடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications