குமரி அனந்தன் நடைப் பயணத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தது கேலிக்கூத்தாக உள்ளது: வைகோ தாக்கு
அரியலூர்: மதுவிலக்கை அமல்படுத்த கோரி குமரி அனந்தன் மேற்கொண்டுள்ள நடைப்பயணத்தை ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை வலியுறுத்தி அகில இந்திய மது விலக்கு பேரவை சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை குமரி அனந்தன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதன் தொடக்க விழா பாரிமுனை ராஜாஜி சிலை அருகே நேற்று தொடங்கியது.

மது விலக்கை வலியுறுத்தும் அனைத்துக்கட்சி தலைவர்களும் கொடியை எடுத்து கொடுத்து நடைபயணத்தை தொடங்கி வைக்கும்படி குமரிஅனந்தன் அழைத்து இருந்தார். இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, த.மா.கா., சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். நேற்று தொடங்கியுள்ள குமரிஅனந்தனின் நடைபயணம் வருகிற பிப்ரவரி மாதம் 12ம்தேதி கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது.
இந்த விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி குமரி அனந்தனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். அப்போது வைகோ, திருமாவளவன், நல்லக்கண்ணு,சரத்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், மதுவைத் துவக்கி வைத்தவர்களே மதுவிலக்குக்கு ஆதரவான நடைப் பயணத்தைத் துவக்கி வைப்பதும் இதற்கு கருணாநிதி வாழ்த்து சொல்வதும் கேலிக்கூத்தாக இருக்கிறது என்று கூறினார். தாம் மதுவிலக்குக்கு எதிரான நடைப்பயணத்தை மேற்கொண்டவன் என்கிற முறையில் தமக்கு அவர்களின் நடைப்பயணத்தைத் பயணத்தைத் துவக்கி வைக்க, ஆதரவு அளிக்க தகுதி உள்ளது என்றும் வைகோ கூறினார்.
மேலும் தமிழகத்தில் எந்த கூட்டணியையும் சேராத 60 சதவீதம் பேர் தேர்தல் நேரத்தில் மக்கள் நல கூட்டணியை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications