உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் மதிமுக பாஜகவுக்கு ஆதரவு!
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மதிமுக இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாடு அமைப்புப் பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு ஆகியோர் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை இன்று (02.09.2014) காலை 10.30 மணி அளவில் சந்தித்தனர்.

உள்ளாட்சி மன்றங்களின் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். இப்படி ஆதரவு கேட்க இருப்பதை அறிந்த நிலையில், அதுகுறித்து நேற்று நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்திலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆலோசனையின்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அதே அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளாட்சி மன்றங்களின் இடைத்தேர்தலில் ஆதரவு வழங்கும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தனது ஆதரவை அது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்குத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே திமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
அதேசமயம், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. தேமுதிக நிலை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications