இவ்வளவு நாளும் கோமாவிலா இருந்தார் ப.சிதம்பரம்?... வைகோ ஆவேசம்
சேலம்: இசைப்பிரியா 2008ஆம் ஆண்டே படுகொலை செய்யப்பட்டதற்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இவ்வளவு நாளும் கோமாவில் இருந்தாரா? என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, இன்று காலை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள், தமிழ் ஆர்வாளர்களின் போராட்டம் தொடரும்.
சிதம்பரத்திற்கு கோமாவா?
இசைப் பிரியா படுகொலைக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கொல்லப்பட்டது 2008 ஆம் ஆண்டு ஆனால், இப்போதுதான் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்று முதல் இவர் கோமாவில் இருந்தாரா?.
அதேப்போல, தி.மு.க தலைவர் கருணாநிதியும், இலங்கையில் 8 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவை பழைய புகைப்படங்கள் போல உள்ளதே? என்றார். ஆனால், அவர் தற்போது இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கிறார். இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்றார் வைகோ.











Click it and Unblock the Notifications