நான் விலை போகமாட்டேன்.. மக்கள் நல கூட்டணி பொதுக்கூட்டத்தில் வைகோ ஆவேச பேச்சு
விழுப்புரம்: மக்கள் நலக் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இக்கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இது நிச்சயம் வெற்றி பெறும். ஆட்சியை பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி பிரசார பயண பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அமைதியாக பேசத்தொடங்கிய வைகோவின் பேச்சில் ஒரு கட்டத்தில் அனல் பறந்தது. அதிமுக, திமுக கட்சிகளை கடுமையாக சாடிய வைகோ, ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மக்கள் நலக்கூட்டணி மட்டுமே கண்டனம் தெரிவித்தது. தி.மு.க., அ.தி.மு.க. கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார்.
இரட்டை வேடம்
சத்தியமங்கலத்தில் தலித் ஊழியரை தரக்குறைவாக பேசிய சார்பு நீதிபதி மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையில் அதிமுக, திமுக கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார். 7 பேரின் விடுதலையை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
வெற்றி நிச்சயம்
நான் எப்போதும் விலை போக மாட்டேன் என்று கூறிய வைகோ, தற்போது உருவாகி உள்ள மக்கள் நலக் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இக்கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இது நிச்சயம் வெற்றி பெறும். ஆட்சியை பிடிக்கும் என்று உறுதியாக கூறி முடித்தார்.
மிரட்டும் வழக்குகள்
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, திமுகவிற்கும், அதிமுகவிற்கும் வாக்களித்து எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அமைச்சர்கள் நீக்கப்படுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்கள் கூறப்படுவதில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு உள்ளது.
அர்ப்பணிப்பு குணம்
அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பமே இன்று நீதி மன்றத்துக்கு செல்லும் நிலையில் உள்ளது. அதனால் ஊழல் செய்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது. அர்ப்பணிப்பு குணம் கொண்ட மக்கள் நலக்கூட்டணிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
திருமாவளவன்
கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், நீண்டகாலமாக சீர்கெட்டுள்ள தமிழகத்தை சீரமைக்க இங்கு ஒன்று கூடியுள்ளோம். இலவசம் தந்தால் ஊழலை கண்டுகொள்ள மாட்டார்கள் மக்கள் என இரு கட்சியினரும் நினைக்கின்றனர். இவர்களுக்குதான் நாடாளும் சக்தி உள்ளதா? நமக்கு இல்லையா?
ஊழல் மலிந்த தமிழகம்
இந்த நாட்டில் ஊழல் புற்று வளர்ந்து கிடக்கிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சியினர் மீது ஊழல் வழக்குகள் உள்ளது. அவர்களுக்கு மாற்றாக தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக மக்கள் நலக்கூட்டணி உருவெடுத்து இருக்கிறது. 4 கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் இந்த களத்தில் கைகோர்த்து களமாடி வெற்றி பெற கடினமாக பணியாற்ற வேண்டும்.
கடன்களை ரத்து செய்வோம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும் போது, தமிழகத்தில் 20 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் தான் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று கூறினார். மக்கள் நலக்கூட்டணி தலைவர் இதுவரை மூன்று கட்ட பிரச்சார பயணத்தை முடித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இனி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.