மதிமுக, பாஜக தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்-மோடியின் பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்பு இல்லை
சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீரென முடிவு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்று கடந்த மாதம் 1-ந் தேதி மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார். இதன் பின்னர் வைகோவுடன் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் நேரில் சந்தித்துப் பேசினர்.
அத்துடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து இரு கட்சியின் நிர்வாகிகளும் பரஸ்பரம் இரு கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்று கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோடியுடன் வைகோ- இரு கட்சி குழு
அத்துடன் நாளை சென்னை வண்டலூரில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் வைகோ பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க இரு கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
திடீர் புறக்கணிப்பு
இந்த நிலையில் மோடியின் நாளைய வண்டலூர் கூட்டத்தில் வைகோ பங்கேற்கமாட்டார் என திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மோடி கூட்டத்துக்கு எந்த ஒரு சுவரொட்டியும் ஒட்ட வேண்டாம் என்றும் நிர்வாகிகளுக்கு மதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கிறது. கூட்டணியில் நீடிப்பது என்பதில் சிக்கல் எதுவும் இல்லை.
தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்...
ஆனால், பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக வைகோ அதிருப்தியடைந்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையிலேயே பாஜக மேடையில் ஏற வேண்டாம் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
ஜெ. சென்டிமெண்ட் காரணம்?
இருப்பினும் கடந்த சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிவாகாமல் ஜெயலலிதாவுடன் இணைந்து மேடையேறிவிட்டு பின்னர் கூட்டணியை விட்டு வெளியேற நேரிட்டது. அதேபோல் தொகுதிப் பங்கீடு முடியும் முன்பே பாஜக மேடையில் ஏறி இறுதியில் கசப்பான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்துவிடக் கூடாது என்ற 'சென்டிமெண்ட்டும்' ஒரு காரணம் என்கிறது மதிமுக வட்டாரம்
அதிர்ச்சியில் பாஜக
பாஜக கூட்டணியில் இணைவது பற்றி தேமுதிக, பாமக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் உள்ளன. இந்த நிலையில் நாளைய மோடி கூட்டத்தை வைகோ திடீரென புறக்கணித்திருப்பது பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.