காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது… வைகோ வலியுறுத்தல்
மானாமதுரை: இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது என்பது காங்கிரசின் கூட்டு சதி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வைகோ கூறியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முதல் குரல் கொடுத்த மன்னர்கள் மருதுபாண்டியர்கள். அக்டோபர் 24-ல் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில், மருதுபாண்டியர்களின் நினைவு நாள் வியாழக்கிழமை காலை 7 மணியளவில், வாரிசுதாரர் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் பொங்கலிட்டு, குருபூஜை நிகழ்ச்சி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெங்கலச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்-புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்-எம்.டி.சி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
இமயம் முதல் குமரி வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரவாளை உயர்த்தியவர்களில் தென் மாவட்டங்களில் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கையில் வேலு நாச்சியார். இவரிடம் சேனாதிபதியாக இருந்து மன்னராக உயர்ந்தவர்கள் இந்த மருதுபாண்டியர்கள். திருப்பத்தூரில் மட்டும் 570 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.
மத்திய அரசு இலங்கைக்கு பல கோடி ரூபாயை அளித்து தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது. அங்கு போர் நடக்க இந்தியாதான் காரணம். காங்கிரஸ் கூண்டில் ஏற்ற வேண்டிய குற்றவாளி. இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தல் கண் துடைப்பு தான்.
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது என்பது காங்கிரசின் கூட்டு சதி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications