சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒரு மாணவி பலி, 8 பேர் காயம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள பனங்கரை கிராமம். பள்ளி மாணவியர் 9 பேர், சூசையப்பர்பட்டினத்திலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி வேன் வராத காரணத்தால் காரில் பள்ளிக்குச் சென்றனர்.
காரை கருணாகரன் என்பவர் ஓட்டி சென்றார். பனங்கரை, நடேசபுரம் பகுதியில் கார் வந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. அதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, தலைகுப்புற கவிழ்ந்து நெறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த திவ்யா என்ற மாணவி சம்பவ இடத்திலே பலியானர். இவர் ப்ளஸ் 2 படித்து வருகிறார். காரை ஓட்டி வந்த டிரைவர் உட்பட மாணவியர் எட்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரை டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை, சேலையூரில் உள்ள, சியோன் பள்ளியில், தொடக்க கல்வி படித்து வந்த மாணவி சுருதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார். அப்போது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன், கல்வி நிறுவனங்கள், கட்டணம் பெற்றுக் கொண்டு தான், வாகனங்களை இயக்குகின்றன; தர்மத்துக்காக இயக்கவில்லை. இருந்தாலும், பழைய, ஓட்டை உடைசல் பஸ்களை, பராமரிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுகிறது.
இந்த வாகனங்களை எல்லாம், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார், அரிதாகவே சோதனை செய்கின்றனர். அதனால், பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதிகாரிகள், தங்கள் கடமையை உணர வேண்டும். அவ்வப்போது, பள்ளி வாகனங்களை பரிசோதித்து, விதிகளை பூர்த்தி செய்கின்றனரா என்பதை, போக்குவரத்து மற்றும் போலீஸ் துறைகள், உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, ஆண்டுக்கு மூன்று முறை ஆய்வு செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சான்று வழங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில், பள்ளி, கல்லூரி வானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வு செய்தாலும் வாகனங்களை சரியாக பராமரிக்காத காரணத்தால் விபத்துகள் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது இன்றைய விபத்தும் இதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது












Click it and Unblock the Notifications