கருத்துக்களம்: குடியுரிமை சட்ட மசோதா ஏன் தேவை..? - வானதி சீனிவாசன்
சென்னை: இந்து, பார்சி, கிறிஸ்துவம், ஜெயனம், மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 31 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியிருந்தால் அவர்கள் குடியுரிமை பெற 11 ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையை மாற்றி, 6 வருடங்களில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சலுகையை இந்த புதிய சட்ட மசோதா வழங்குகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாத்தை அரசாங்க மதமாக அறிவித்தது மட்டுமல்லாமல் அந்த மதத்தை வெகு தீவிரமாக பினபற்றும் நாடுகளாகும்.
மேற்கண்ட இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லீம் அல்லாதவர்கள் பல கொடுமைகளை அனுபவித்து சுதந்திரத்தோடு வாழ இயலாத சூழலில் இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சம் புகுவது வெகு காலமாக நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனையை 1947-ம் ஆண்டு நடந்த மத அடிப்படையிலான பிரிவினையோடு சேர்த்து புரிந்துக்கொண்டால் தால் இந்த மசோதா எத்தனை அவசியமானது என்பது புரியும். நாட்டு பிரிவினையின் போது பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் 1950-ம் ஆண்டு முதல் சிறுபான்மை இந்துக்களுடைய எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. மியான்மரிலிருந்து வரும் ரோகிங்யா முஸ்லீம்களை இந்தச் சட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இது குறிப்பிட்ட மூன்று நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த தமிழ் சகோதரர்கள் மீண்டும் இலங்கை சென்று அவர்களுடைய நில புலன்களை பெற்று வழிபாட்டு சுதந்திரத்தோடு அங்கிருக்கும் சிங்களவர்களோடு சம உரிமை பெற்று வாழ வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. அதற்கான முயற்சிகளையும் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டு, தமிழர்களுக்கு ஆயிரக்கணக்கான வீடுகள், போக்குவரத்து வசதிகள், தொழில் செய்ய உதவிகள் என ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.
ஆகவே, இலங்கையை முழுவதுமாக சிங்களவர்கள் கையில் கொடுக்காமல், தமிழர்கள் தங்கள் பாரம்பரிய உரிமைகளோடு அங்கு வாழ்வது தான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இதேபோல் இந்தியாவில் வாழமுடியாது எனக் கருதி பாகிஸ்தானில் குடியேறிய அகமதியா முஸ்லீம்கள் அந்நாட்டு இஸ்லாமியர்களுடனே முரண்பட்டு மீண்டும் குடியுரிமை கேட்பது நியாயமல்ல. அகதிகளாக வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வேண்டும் எனக் கூறும் அரசியல் கட்சித் தலைவர்கள் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு ஆதரவு தருவார்களா?
வழக்கமாக இந்நாட்டில் குடியுரிமை பெற ஏற்கனவே உள்ள சட்டவிதி முறைகளில் எந்த மாற்றமும் இல்லாததால், முறைப்படி இந்நாட்டில் 11 ஆண்டுக்காலம் வசிக்கும் முஸ்லீம்கள் குடியுரிமை பெற்றுக்கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை.
(மேற்கண்ட இந்த கட்டுரையின் கட்டுரையாளர் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்)