திருச்சி: ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு - வி. சி. கட்சியினர் கைது!
திருச்சி: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உருவ படத்தை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இன்று காலை கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், செருப்பு மாலையுடன் கூடிய ராஜபக்சேவின் உருவம் தாங்கிய பேனர்கள் மற்றும் ராஜபக்சேவின் உருவ பொம்மையை சுமந்த பாடையுடன் மேளம் அடித்தபடி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது "ராஜபக்சே ஒழிக, அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே இப்போது இந்திய மீனவர்களை கொல்லதுடிக்கிறார்கள்" என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், "போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், கடந்த 45 வருடமாக இலங்கையில் தூக்குதண்டனை வழங்கப்படவில்லை.
ஆனால் இப்போது இந்திய தமிழக மீனவர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததை போல் தமிழக மீனவர்களையும் கொல்லதுடிக்கிறது ராஜபக்சே அரசு. இந்த தண்டனையை எதிர்த்து மத்திய அரசு தலையிட்டு அப்பாவி தமிழர்களை மீட்கவேண்டும். செய்யத் தவறினால் போராட்டங்களை முன்னெடுப்போம் "என்றார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பிலிருந்த காவல்துறை டி.எஸ்.பி கணேசன் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை பிடுங்கி எறிந்தனர்.
இதில் ஆவேசமடைந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள், ராஜபக்சே பேனரை தீயிட்டு எரித்தனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரால் கைது செயப்பட்டனர்