3 தொகுதிகளிலும் தேமுதிகவிற்கு ஆதரவு கிடையாது - திருமாவளவன்
3 தொகுதிகளிலும் தேமுதிகவிற்கு ஆதரவு கிடையாது என்றும் வைகோவின் கருத்தே எங்கள் கருத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் தேமுதிகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக நேரடியாக களத்தில் உள்ளன. இதில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்க 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணித்துள்ளது. இருப்பினும் தே.மு.தி.க. ஆதரவு கேட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் தெரிவித்திருந்தன.
அதே நேரத்தில் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து கூறியிருந்த பிரேமலதா, ஆதரவு கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளனர். என்னை பொறுத்த வரை கேட்டுப் பெறுவது சுயநலம், பொது நலம் என்றால் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள திருமாவளவன், யாருக்கும் வலிய சென்று ஆதரவு கொடுக்கும் நிலையில் மக்கள் நலக்கூட்டணி இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு ஆதரவு கிடையாது என்றும் வைகோ அவர்களின் கருத்துதான் எங்களின் கருத்து, அதுவே மக்கள் நலக்கூட்டணியின் கருத்து என்றும் கூறியுள்ளார்.
தேமுதிகவிற்கு ஆதரவு கொடுப்பதில் மக்கள் நலக்கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்ட நிலையில் வைகோவின் கருத்துதான் தங்களின் கருத்து என்று கூறியுள்ளார் திருமாவளவன், அதே நேரத்தில் யாருடைய ஆதரவையும் பெறாமல் தனித்து போட்டியிட்டு தேமுதிகவின் பலத்தை, வாக்குவங்கியை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications