தமிழகத்தில் மநகூட்டணி... புதுவையில் திமுக- காங். வேட்பாளர் 'நாசா'வுக்கு ஆதரவு- விசிக தடலாடி!
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிரடியாக புதுச்சேரி நெல்லித்தோப்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமகவுக்கு மாற்றாகத்தான் இடதுசாரிகள், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. ஆனால் அண்மைக்காலமாக மக்கள் நலக் கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக பிற கட்சி தலைவர்கள் மறைமுகமாக குற்றம்சாட்டிவருகின்றனர்.

மதிமுகவினரும் விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணியையே விரும்புவதாக கூறிவருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் இருப்பது பகிரங்கமாக வெடித்து வருகின்றன.
இந்த நிலையில் அதிரடியாக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அம்மாநில முதல்வர் நாராயணசாமியை ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை இன்று சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் இதற்கான ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், எங்களுடைய இந்த முடிவு குறித்து இடதுசாரிகள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இது தமிழகத்துக்கு பொருந்தாது. அத்துடன் நாராயணசாமியை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதியில் திருமாவளவன் பிரசாரம் செய்வார் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications