தள்ளிக் கொண்டு... மிதந்து.. பஞ்சராகி... மழையால் தத்தளித்து "டங்குவார்" அந்து போன வாகனங்கள்
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றன. இதனால் திரும்பிய திசையெங்கும் மழை நீர் சூழ்ந்து வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை மாநகர சாலைகளில் திரும்பிய திசையெல்லாம் மழை நீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குண்டும், குழியும்:
இதன் காரணமாக சாலைகளில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலைகளில் சென்றவர்கள் அதில் சிக்கினர்.

தவறி விழுந்த வாகன ஓட்டிகள்:
மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் வெள்ளத்தில் தவறி விழுந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்கள் பலர் தாங்கள் சென்ற வாகனம் பழுதானதால் மழை வெள்ளத்தில் சிக்கி தங்களது வண்டியை தள்ளிக் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

உதவி செய்த இளைஞர்கள்:
இவர்களுக்கு இளைஞர்கள் சிலர் உதவி செய்து வெள்ளத்தில் இருந்து வாகனங்களை வெளியில் கொண்டு வந்தனர். பலர் ரிக்க்ஷாக்கள், டயர் வண்டிகளைப் பிடித்து அதில் வாகனங்களை ஏற்றிக் கொண்டு சென்றதையும் பார்க்க முடிந்தது.

தேங்கி நிற்கும் வெள்ளம்:
பெரம்பூர் பாலத்தில் ஏறி ஜமாலியா பகுதிக்கு வாகனங்களில் வருபவர்கள் மழைக்காலங்களில் அங்கு தேங்கி நிற்கும் வெள்ளத்தில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. நேற்று பெய்த மழையிலும் இங்கு சாலையின் இருபுறமும், இடுப்பளவுக்கு இங்கு தண்ணீர் தேங்கியது.

அலை போல் எழுந்த வெள்ளம்:
இந்த வழியாகவும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். பஸ், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் இந்த வெள்ளத்தை கடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிள்களை மூழ்கடிக்கும் அளவுக்கு மழை வெள்ளத்தில் அலை எழும்பியது. இதில் பலரது மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

பெண்களுக்கு பாதிப்பு:
பெண்கள் பலர் பழுதான தங்களது மோட்டார் சைக்கிள்களை அங்கேயே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றனர். இதேபோல பல இடங்களில் சாலைகளிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications