மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? வேல்முருகன்
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையிலும் இறங்காத நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதை வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பிரச்சனையில் இரண்டு நாட்கள் ஆகியும் மவுனம் காக்கிறது மோடி அரசு பல குரலில் பேசுகிறது பாஜக. பலியான பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் பகுதி முழுவதிலுமுள்ள மீனவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவரின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட உத்தரவாதம் வேண்டும். பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்து தமிழகத்தில் சிறை வைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சார்பில் வந்து எங்களோடு பேச வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த அறப்போராட்டம் தொடர்கிறது.
மீனவப் பிரதிநிதிகளை தமிழக அமைச்சர்கள் போய் சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பிரிட்ஜோ குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் குண்டு காயம் ஏற்பட்ட ஜெரோனுக்கு ரூ.1 லட்சமும் வழங்க முன்வந்தனர். ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டனர். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு தர வேண்டும். அதற்காக மத்திய அரசு நேரில் வந்து எங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதற்கு தமிழகம் முழுவதிலுமுள்ள இதர மீனவர்களும் மீனவ அமைப்புகளும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆதரவாக உள்ளனர். இந்தப் பிரச்சனையில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியமை. கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு, இலங்கை அரசு, தமிழக பாஜக ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் தெளிவில்லை. முரண்பாடாக, ஐயத்திற்கிடமளிப்பாக உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில்,"மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டதில் இந்திய அரசு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தை இலங்கைக்கான இந்தியத் தூதர் அந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். இதில் முழுமையான விசாரணை நடத்த இலங்கை கடற்படை உறுதி அளித்துள்ளது" என்கிறது.
இலங்கை வெளியுறவுத்துறையின் அறிக்கையில்,"இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இலங்கை கடற்படையினருக்குத் தொடர்பில்லை என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிகிறது. என்றாலும் யார் இதில் சம்பந்தப்பட்டார் என்பதை இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிவோம்" என்கிறது.
பாஜகவின் சுப்ரமணிய சுவாமி, தமிழகத்தல் உள்ள பொறுக்கிகள் கட்டுமரத்தை எடுத்துச்சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிட வேண்டும் என்கிறார். பாஜகவின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த துப்பாக்கிச்சூடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது என்றார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவமே முதலும் முற்றுமாக இருக்கும் என்கிற அளவில் இந்தப் பிரச்சனையில் விசாரணை நடத்தப்படும் என்கிறார். ஆக, விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதுதான் இதில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறி தெரியவில்லை. சொல்லாடல்தான் முன்னுக்கு வருகிறதே தவிர செயல்பாடு இல்லை. இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது முழுக்க முழுக்க தமிழக அரசின் பொறுப்பு. அவ்வாறு செய்ய தமிழக அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக மக்களின் தலையாய கடமை. எனவே இதற்கு மக்கள் போராட்டமே சரியான வழிமுறையாக இருக்க முடியும்.
அந்த வகையில் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிலமணி நேரங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இராமேஸ்வரத்தில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியது. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம் தருமபுரி, வேலூர், கிரிஷ்ணகிரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் எனது தலைமையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தின் முடிவில் காவல் துறையினரால் கைதாகி விடுவிக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான இலங்கை தூதரை இலங்கை தூதரகத்தில் நேரில் சென்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம்.
அதற்கு முன் இரு தினங்கள் முன்பே இலங்கைத் தூதரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் சந்தித்து, தமிழக மீனவர் மற்றும் ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அதை நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரித்தன. தற்போது பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையிலும் இறங்காத நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதை வன்மையாகக் கண்டிக்கிறது.
அதோடு இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர தகுந்த அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டத்தில் இறங்க அனைத்துக் கட்சிகளையும் தமிழக நலன் விரும்பும் அமைப்புகளையும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications