பல தற்கொலை போராட்டங்கள் நடைபெறும்... முன்பே பேஸ்புக்கில் போட்ட விக்னேஷ்!
சென்னை: காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நிர்வாகி விக்னேஷ், நேற்று முன்தினமே தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 'தற்கொலை போராட்டம்' நடைபெற வாய்ப்புள்ளது என பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 'காவிரி மீட்பு உரிமை' பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளித்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
இதனிடையே விக்னேஷ் நேற்று முன்தினம் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை(தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் TRP rate ஐ உயர்த்திக்கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன். அப்போவது மானதமிழ் இனம் கொதித்து எலட்டும் (எழட்டும்) .மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும்.
என்று பதிவிட்டிருக்கிறார். இதனை முன்னரே கவனித்திருந்தால் இத்தீக்குளிப்பு முயற்சியை தடுத்திருக்க முடியும் என்கின்றனர் நாம் தமிழர் நிர்வாகிகள்.