தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை: சு.ப.உதயகுமார்
நெல்லை: தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை என பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சு.ப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பச்சைத் தமிழகம் சார்பாக போட்டியிடும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரான, சுப.உதயகுமார் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டம் ஓயவில்லை. தொடர் வழக்கு, நீதிமன்ற அலைக்கழிப்பு உள்ளிட்டவற்றால் சற்று சோர்வடைந்துள்ளனர். கூடங்குளம் அணு உலைகள் மூடப்படும்வரை போராட்டம் நீடிக்கும்.
தலித் விரோத செயல்களை முன்னிலைப்படுத்தும் பாமகவின் ஆதரவு தேவையில்லை. தேமுதிகவின் ஆதரவும் வேண்டாம். மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, தொல்.திருமாவளவன் ஆகியோர் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களது ஆதரவை ஏற்பேன். இல்லையெனில், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளரையும் எதிர்த்து களம் காணுவேன். தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை.
ஜனவரி 18-இல் பச்சைத் தமிழகம் தொடங்கப்பட்டது. எனவே, முதல்கட்டமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். கூடங்குளம் எதிர்ப்பு குறித்த எங்களது குரலை பேரவையில் நாங்களே எழுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம். இவ்வாறு உதயகுமார் கூறினார்.