தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு: எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 13 குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.அந்தக் குழந்தைகள் உயிர் இழந்ததற்கான முழு பொறுப்பையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எடைக் குறைவினால்தான் குழந்தைகள் இறந்துபோயின என்று அரசு சொல்வதை மக்கள் நம்பவில்லை.கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை தமிழக அரசு வழங்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பிஞ்சு குழந்தைகளைக் காப்பாற்ற சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், தாய் சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கே சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரியில் நடைபெற்ற சம்பவத்தில் கவனக் குறைவாக இருந்த மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் அறிக்கை
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள் தோறும் சுமார் 100 குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 படுக்கைகள் மட்டுமே சுவாசக் கருவி வசதியுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications