2016 சட்டசபை தேர்தலுடன் விஜயகாந்தின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடும்- தமிழருவி மணியன்
திருப்பூர்: இந்த சட்டசபை தேர்தலுடன் தேமுதிகவின் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம், அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த கட்சி வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவிமணியன், திமுக - காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக சாடினார். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியுடன் இன்றைக்கு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார் கருணாநிதி.
தமிழகத்து வாக்காளர்களிடம் கருணாநிதி இதற்கு விளக்கம் அளிப்பாரா என்று தமிழருவி மணியன் கூறினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழ் இனத்திற்கு எதிரான கூட்டணி என்றும் தெரிவித்தார்.

கிரானைட் கொள்ளை
கிரானைட் கொள்ளையில் கருணாநிதி ஈடுபட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார். இதேபோல ஜெயலலிதாதான் கிரானைட் கொள்ளைக்கு காரணம் என்று கருணாநிதி கூறுகிறார். இப்படி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். திமுக, அதிமுக ஆகிய இருவர் மீது இடதுசாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாரை வார்த்த கருணாநிதி
கிரானைட் கொள்ளையைப் பற்றி பேச இவர்கள் மூன்று பேருக்குமே தார்மீக உரிமை கிடையாது. 1989 வரை டாமின் நிறுவனத்தின் கீழ் கனிம வளங்கள் இருந்தன. 1989ல் ஆட்சிக்கு வந்த உடன் தனியாருக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி, 1991ல் பிஆர்பி நிறுவனத்திற்கு தாரை வார்த்தவர் ஜெயலலிதா.

இடதுசாரிக் கட்சிகள்
இருவரும் கூட்டுக்கொள்ளைக்காரர்கள். மதுரையில் நடக்கும் கிரானைட் கொள்ளையைப் பற்றி பேசும் இடதுசாரிகள் கிருஷ்ணகிரியில் நடக்கும் கிரானைட் கொள்ளையில் ஈடுபடுவதை பற்றி பேச தயாரா? என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

தளி ராமச்சந்திரன்
3 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்குகள் தளி ராமச்சந்திரன் மீது போடப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் போடப்பட்டு, சொத்து முடக்கப்பட்டது. தளி ராமச்சந்திரன் பாட்டாளியா என்றும் கேள்வி எழுப்பினார்.

மக்கள் நலக்கூட்டணி
மக்கள் நலக்கூட்டணி என்ன ஆனது. நோக்கம் என்ன? மாற்று அரசியலை வளர்த்தெடுப்பதுதான் அதன் நோக்கம் என்று கூறியவர்கள் விஜயகாந்தை முன்னிறுத்தியது ஏன்? கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு விஜயகாந்தா?.

வாரிசு அரசியல்
விஜயகாந்தின் ஒரு பக்கம் மனைவி இன்னொரு பக்கம் மைத்துனர் இருக்கின்றனர். அங்கு ஜனநாயகம் இருக்கிறதா? மனைவி, மைத்துனர் சேர்ந்து எடுக்கும் முடிவுக்குத்தானே விஜயகாந்த் கட்டுப்படுகிறார்.

விஜயகாந்த் அரசியல் வாழ்வு
மக்கள் நலக்கூட்டணி தனக்கான தார்மீக தகுதியை இழந்து விட்டது. வைகோ சொல்வது போல சொன்னால் கேப்டன் விஜயகாந்த் அணி இந்த தேர்தலுடன் சிதைந்து போகும். விஜயகாந்தின் அரசியல் இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்து விடும் என்று கூறினார்.

வசீகரம் இல்லை
ஒருகோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்று வைகோ கூறி வருகிறார். அவர்கள் எப்படி வாக்களிப்பார்கள். இவர்களை வசீகரிக்க விஜயகாந்திடன் எதுவும் கிடையாது. வைகோவும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள தலைவர்களும்தான் மாற்று அணி என்று கூறி தவறான பாதைக்கு சென்று விட்டார்கள் என்றார் தமிழருவி மணியன்.












Click it and Unblock the Notifications