புகாரை பதிவு செய்ய செல்போன் கேட்கும் காவல்துறையை ஜெயலலிதா வாழ்த்துகிறார்.. விஜயகாந்த் விளாசல்
சென்னை: தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் போது விஜயகாந்த் பேசியதாவது:
நாட்டு நிலைமை எப்படி இருக்கிறது? பெண் முதல்வராக இருக்கும் ஒரு மாநிலத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் பிடித்துள்ளனர். அதுவும் கோர்ட் நெருக்கடியால் பிடித்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்காக போலீசாருக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தீர்களா, விஷ்ணு பிரியா கொலை வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கவில்லை, வினுப்பிரியா என்ற பெண்ணை தவறாக சித்தரித்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கூட செல்போனை லஞ்சம் பெற்றுள்ளது காவல்துறை. இது நாடா? இல்ல எங்கே இருக்கோம் என எனக்கு தெரியவில்லை.
தெய்வம் நிச்சயம் உங்களை தண்டிக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.