வெள்ள பாதிப்பு: வீட்டு உபயோக பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்க- விஜயகாந்த்
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள மதிப்புக்கூட்டுவரியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் வட மாவட்டம், தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீடுகளிலிருந்த இருசக்கர மோட்டார் வாகனம், சைக்கிள், ‘வாஷிங் மிஷின்', பிரிட்ஜ், டி.வி, கிரைண்டர், மிக்ஸி, பேன், பீரோ, கட்டில், சோபா செட், கியாஸ் அடுப்பு என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும், அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் இழந்து நிற்கிறார்கள்.

அதோடு மட்டுமல்ல பல குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இழந்தவற்றை புதிதாக வாங்குவதற்கு, லட்சக்கணக்கில் செலவிட வேண்டும். மீண்டும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தை வழக்கம் போல் தொடங்க குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறுமாத காலமாகும்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 14.5 சதவீத மதிப்புக்கூட்டுவரியை (வாட்) ரத்து செய்யவேண்டும்.
அனைத்து உடைமைகளையும் இழந்து மீளாத்துயரில் உள்ள, பாதிக்கப்பட்ட மக்களுக்காக மதிப்புக் கூட்டுவரியை ரத்து செய்வது, அவர்களுக்கு ஒரு வகையில் உதவியாக இருக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்து, உத்தரவிட வேண்டுமென விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications