திராவிட கட்சிகளுடன் தேமுதிக சேராது- விஜய்காந்த்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவலால் பரபரப்பு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக திராவிடக் கட்சிகளைப் புறக்கணிக்கும். இதை விஜயகாந்த்தின் பேச்சிலிருந்து தான் தெரிந்து கொண்டதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். விஜயகாந்துடனான சந்திப்பிற்குப் பிறகு இதனை அவர் கூறியுள்ளார்.
அவரது இந்தத் தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வர மாட்டாரோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது. அப்படியானால் அவர் மக்கள் நலக் கூட்டணிக்கோ அல்லது பாஜக கூட்டணிக்கோ போகலாமா என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை டிராபிக் ராமசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். எதற்காக இந்த சந்திப்பு என்று தெரியவில்லை.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் டிராபிக் ராமசாமி. அப்போது அவர் கூறியதாவது:-
விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதை விஜயகாந்த் பேசியதில் இருந்து தெரிந்துகொண்டேன்.
இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும். விஜயகாந்திற்கு எனது முழு ஆதரவு உண்டு' என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன.
ஏற்கனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. ஆனால், கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவே கூட்டணி குறித்து தெளிவான முடிவுகளை இன்னமும் தேமுதிக அறிவிக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் டிராபிக் ராமசாமியின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications