ராணிப்பேட்டை அரசு ஊழியருக்கு 59 வயது... அரசு பணியில் இருப்பவர்களுக்கு இப்படியும் வரலாம் சிக்கல்
ராணிப்பேட்டை: பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஆகியோர் கொடுக்கும் பரிந்துரை முக்கியம் ஆகும். சர்வேயர் நிலத்தை அளந்து சரியான அளவு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் இடம், எந்த வகையான இடம்.. இவருடைய இடம் தானா என்பதை ஆய்வு செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதாவது கள ஆய்வு செய்து இவர்கள் தரும் அறிக்கையின் படியே பட்டா வரும். இந்த சூழலில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்பது ஆங்காங்கே நடக்கிறது. அப்படி லஞ்சம் வாங்கியதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக சிக்கி உள்ளார்.
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய என்னதான் இசேவை மையத்தில் விண்ணப்பித்தால் போதும் என்று அரசு அறிவித்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. லஞ்சம் கேட்காமல் பணிகளை முடிக்க முயன்றால், அலைய வைக்கப்படுவதாக புகார்கள் உள்ளது. இந்தியன் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமனி சொல்வார். 3 நாட்கள் லீவு போட்டு அலைய வேண்டும். அப்படி அலைந்தாலும் வேலை உடனே முடியாது. மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும் என்ற பொருளில் கூறுவார். அதேபோல் தான் பட்டா பெயர் மாற்றம் உள்பட சில பணிகளை செய்ய சில அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்கதையாகவே உள்ளது. ராணிப்பேட்டையில் லஞ்சம் வாங்கியவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 42 வயதாகும் வினோத் என்பவருக்கு வடமாம்பாக்கம் பகுதியில் 1,048 சதுர அடியில் இருக்கும் வீட்டுமனை பட்டாவை மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் பட்டா மாற்றம் செய்து கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் (59) ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வினோத் பேசியதில் ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வினோத் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கணேசனிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை வினோத்திடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் வினோத் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து தருமாறும் கிராம நிர்வாக அலுவலர் கூறினாராம். இதையடுத்து நேற்று பகலில் வினோத் தாலுகா அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த தணிகாசலத்திடம் ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலத்தை மடக்கிப் பிடித்து கையும், களவுமாக கைது செய்தனர்.














Click it and Unblock the Notifications